Header Ads

விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே பயங்கரவாத அமைப்பு விடுதலைப் புலிகள்

போர் நடைபெறும் காலங்களில் மாத்திரமல்ல அமைதி நிலவும் சந்தர்ப்பங்களிலும் முப்படையினருக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


திருகோணமலை சீனன் குடா விமானப்படை முகாமில் இன்று நடைபெற்ற விமானப்படையின் அதிகாரிகளை அதிகார சபைக்கு நியமித்தல் மற்றும் விமானிகளாக பயிற்சி பெற்ற விமானப்படை விமானிகளுக்கு இலட்சினைகளை அணிவிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது விமானப்படையினரின் நடவடிக்கைகளை விசேடமாக பாராட்ட வேண்டும். இப்படியான சந்தர்ப்பங்களில் விமானப்படையினரின் பணிகளை வேறு எவருக்கும் செய்ய முடியாது.

அத்துடன் நாட்டின் கரையோரத்தை பாதுகாத்தல், கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு படகுகள் சம்பந்தமாக அவதானித்தல், காடழிப்பு, சட்டவிரோதமானவை பயிரிடுதல் போன்றவற்றை தடுத்தல் ஆகியவற்றை விமானப்படையினரே மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தக் கூடிய பலம் இருந்த ஒரே பயங்கரவாத அமைப்பு. உலகில் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்பட்டிருந்த அந்த அமைப்பை தோற்கடிக்க விமானப்படையினர் முக்கிய பங்காற்றினர்.

விடுதலைப் புலிகள் அமைப்பே யுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை உலகிற்கு அறிமுகம் செய்தது

இதனால், வானில் மேற்கொள்ளும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக எந்த விமானப்படையினருக்கும் இல்லாத அனுபவம் இலங்கை விமானப்படையினருக்கு இருக்கின்றது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.