Header Ads

சஜித் தலைமையிலான இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்

இன்று மாலை சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணி அமைப்பது சம்பந்தமான முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இந்தக் கூட்டத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில், இந்த கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

அந்த தீர்மானங்கள் வருமாறு,

(1) சஜித் பிரேமதாசா தலைமையில் பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்படும். புதிய சின்னத்தில் நாடெங்கும் இக்கூட்டணி களம் இறங்கும்.

(2) இக்கூட்டணியில் ஐதேக உட்பட ஐதேமுயின் அனைத்து கூட்டு கட்சிகளும் இடம் பெறும். சிவில் சமூகமும், புதிய அரசியல் கட்சிகளும் உள்வாங்கப்படும்.

(3) இருபத்தாறு வருடங்கள் தலைமையில் இருந்த முன்னாள் பிரதமர், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பிடிவாதத்தை மாற்றிக்கொண்டு, புதிய மாற்றங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். ஆனால் அவரது காலம் தாழ்த்தும் நடவடிக்கைகளை இனியும் நாம் பொறுத்துக்கொள்ள போவதில்லை. அவரது மனமாற்றத்திற்காக நாம் காத்திருக்க போவதும் இல்லை.

(4) தற்சமயம் ஐ.தே.கட்சியின் 55 எம்பிக்களும், ஐ.தே.முன்னணியின் 20 எம்பிக்களும் எமது அணியிலேயே இருக்கின்றார்கள். ரணில் அணியில் எஞ்சி இருக்கும் 8 எம்பிக்களிலும் சிலர் எம்முடன் இணைய இணங்கியுள்ளனர்.

(5) சிங்கள பெளத்தர்களின் அபிமானத்தை பெற்ற ஐதேகவின் சிரேஷ்ட தலைவர், சபாநாயகர் கரு ஜயசூரியவை உள்வாங்கும் நடவடிக்கையையும் நாம் உடனடியாக ஆரம்பித்துள்ளோம். இன்று மாலை மனோ கணேசன் எம்பி சபாநாயகரை சந்தித்தார். நாளை காலை சஜித் பிரேமதாச எம்பி சபாநாயகரை சந்திக்கிறார்.

இன்றைய கூட்டத்தில், ஐதேக சார்பாக சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும்பண்டார, கபிர் ஹசீம், மலிக் சமரவிக்கிரம, சரத் பொன்சேகா, கூட்டு கட்சிகளாக தமுகூ தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் திகாம்பரம், ஸ்ரீமுகா தலைவர் ரவுப் ஹக்கீம், ஜாஹெஉ தலைவர் சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
Powered by Blogger.