சந்திரிகா தலைமையில் சஜித்துடன் இணையும் சு.க. எம்பிக்கள் - தலைக்கு 25 கோடி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படுகிறது.
இவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக அவருக்கு நெருக்கமான இரண்டு முக்கியஸ்தர்களுடன் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறார்.
இதனால், கட்சியில் உள்ள அவருக்கு நெருக்கமானவர்களை கொண்டு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
ஒரு உறுப்பினருக்கு தலா 25 கோடி ரூபா வழங்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

Post a Comment