Header Ads

இன்று முதல் அலுவலக பணிக்கு செல்வோர் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்

ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும் நிலையில், இன்றைய தினம் பணிகள் ஆரம்பிக்கப்படும் மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்துக்குரிய அரச, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், தங்களுடைய அலுவலக அடையாள அட்டைக்கு மேலதிகமாக, தொழில் தருநரால் சேவைக்கு அழைக்கும் கடிதமொன்றைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் அறிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, குறித்த கடிதம், கடதாசியாக இல்லாவிடினும், வைபர், வட்ஸ்அப், மின்னஞ்சல் ஊடாகத் தரவேற்றம் செய்யப்பட்டு, தமது அலைபேசியில் சேமித்து வைத்திருந்ததாகவும் இருக்கலாமென்றார்.

ஸ்மார் அலைபேசி அல்லாதோர், இது தொடர்பான குறுந்தகவலையேயும் தொழில் தருநரிடமிருந்து பெற்று, தமது அலைபேசியில் சேமித்து வைத்து, அதைப் பாதுகாப்புத் தரப்பினருக்குக் காண்பித்துப் பணிக்குத் திரும்ப முடியுமென்றும் அவர் கூறினார்.

பணியிடங்களுக்குச் செல்வதாகக் கூறி, அநாவசியமான முறையில் மக்கள் நடமாடுவதைத் தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இன்று முதல் தொழிலுக்குத் திரும்புபவர்கள், இதைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென்றார்.

No comments

Powered by Blogger.