கிரிக்கட்டில் இதுவரை யாரும் தொடாத உச்சம் தொட்ட லேடி சச்சின்
மகளிர் கிரிக்கெட்டில் இந்திய மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் புதிய மைல்கல் சாதனை செய்து வியக்க வைத்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடி, மகளிர் கிரிக்கெட்டில் யாரும் தொடாத உயரத்தை தொட்டுள்ளார் மிதாலி ராஜ்.
கிட்டத்தட்ட மகளிர் கிரிக்கெட்டில் சச்சினுக்கு இணையான சாதனை என்றும் இதை கூறலாம்.
மிதாலி ராஜ் ஜூன் 1999இல் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள்
போட்டியில் அறிமுகம் ஆனார். அப்போது முதல் கிரிக்கெட் ஆடி வரும் அவர் 20
ஆண்டுகளை கடந்து மகளிர் கிரிக்கெட்டில் உச்சத்தை தொட்டுள்ளார்.
ஆடவர் கிரிக்கெட்டில் சச்சின் 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடி முதல்
இடத்தில் இருப்பது போலவே, மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் 20
ஆண்டுகளுக்கும் மேல் கிரிக்கெட் ஆடி முதல் இடத்தில் இருக்கிறார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் இந்த மைல்கல்
சாதனையை பதிவு செய்துள்ளார் மிதாலி ராஜ். இந்தப் போட்டியில் இந்தியா 8
விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
மகளிர் கிரிக்கெட்டில் ஏற்கனவே பல சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும்
மிதாலி ராஜ், அதிக நாட்கள் கிரிக்கெட் ஆடிய வீராங்கனை என்ற சாதனையையும் தன்
வசம் வைத்துள்ளார். மேலும், 20 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிய முதல் வீராங்கனை
மிதாலி தான்.
ஆடவர் கிரிக்கெட்டையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொண்டால் மிதாலி
ராஜ் நான்காவது இடத்தில் இருக்கிறார். சச்சின் (22 ஆண்டுகள், 91 நாட்கள்),
சனத் ஜெயசூர்யா (21 ஆண்டுகள் 184 நாட்கள்), ஜாவேத் மியான்தத் (20 ஆண்டுகள்
272 நாட்கள்) கிரிக்கெட் ஆடி முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
இதற்கு முன்பாக, மிதாலி ராஜ் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஒருநாள்
போட்டிகள் ஆடியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.
204 போட்டிகளில்
ஆடி இருக்கிறார். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் (191
போட்டிகள்), இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி (178 போட்டிகள்) உள்ளனர்.
அதே போல, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த சாதனையும் மிதாலி
ராஜ் வசம் தான் உள்ளது. 204 போட்டிகளில் 6,731 ரன்கள் குவித்துள்ளார் அவர்.
16 வயதில் தன் முதல் சதம் அடித்த மிதாலியின் சாதனை இன்று வரை
முறியடிக்கப்படவில்லை.
அதே போல, 2004 முதல் 2013 வரை ஒரு ஒருநாள் போட்டி கூட விடாமல் ஆடி
சாதனை படைத்தார். 109 ஒருநாள் போட்டிகள் இடைவிடாமல் ஆடினார். இந்த
சாதனையும் இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்பிய மிதாலி ராஜ்,
சமீபத்தில் டி20 போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார். ஒருநாள்
அணியில் மிதாலி ராஜ் கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 உலகக்கோப்பை தொடர் வரை ஆட உள்ளதாக கூறி இருக்கிறார் மிதாலி.
அப்படி அவர் ஆடும் பட்சத்தில் சச்சின் சாதனையை முறியடித்து அதிக நாட்கள்
கிரிக்கெட் ஆடியவர என்ற பெருமையை பெறுவார்.

Post a Comment