Header Ads

கடும் விமர்சனத்தையடுத்து சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்த ஐசிசி





சர்வதேச கிரிக்கெட் நிறுவனமானது சூப்பர் ஓவரில் கடைபிடிக்கப்பட்டு வந்த விதிமுறைகளை தற்போது மாற்றியமைத்துள்ளது.

12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி முடிவுடைந்தது.

இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 50 ஓவர்களில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 241 ஓட்டங்களை குவித்தன.

இதனையடுத்து யார் வெற்றியாளர் என்று தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 15 ஓட்டங்கள் எடுத்தன. இதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வென்றது.

எனினும் இதன் பின்னர் இப்  போட்டியின் முடிவு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த முடிவை பல கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்து தள்ளினர்.

இந் நிலையில் ஐ.சி.சி. நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அந்த அறிவிப்பில், சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஒரு போட்டி சமநிலையில் முடிந்தால், போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும்.

இந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் ஒரே ஓட்டம் எடுக்கும் பட்சத்தில் மீண்டும் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்படும்.

இந்த முடிவு ஐ.சி.சி.யின் கிரிக்கெட் குழுவின் பரிந்துரையின் படி எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிகள் ஐ.சி.சி.யின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 தொடர்களில் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.