கொரோனா' வைரஸை கண்டுபிடித்த டாக்டருக்கும் 'கொரோனா தொற்று
சீனாவில் பரவி வரும் ‘கொரோனா’ வைரசால் இதுவரை 563க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை சீனாவை சேர்ந்த லீ வென்லியாங் என்ற டாக்டர் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டு பிடித்து விட்டார்.
சீனாவில் வுகான் மாகாணத்தில் உள்ள மத்திய மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த வென்லியாங் இதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவரிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் தீராத காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் கடல் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் சந்தையில் பணியாற்றியவர்கள் என்பதோடு, அனைவருக்குமே ஒரே மாதிரியான வைரஸ் தாக்கியுள்ளதை லீவென்லியாங் கண்டறிந்துள்ளார்.
பின்னர் குறித்த நோயாளிகளை கையாளும் போது பாதுகாப்புக்காக ‘மாஸ்க்’ அணிந்து கொள்ளுங்கள் என நண்பர்களையும் அறிவுறித்தியுள்ளார்.
இதனையடுத்து இவரின் இந்த நடவடிக்கைகளுக்கு தகவல்கள் இணையதளத்தில் வேகமாக பரவியதால் சீன பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர் லீ வென் லியாங்கை எச்சரித்துள்ளனர்.
இது போன்ற தகவல்களை பரப்பினால் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என எச்சரித்தோடு அவரிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி உள்ளனர்.
இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து ஜனவரி 12ம் திகதி அவரையும் ‘கொரோனா’ வைரஸ் தாக்கியது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வாயிலிருந்து ரத்தம் வந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது வரையில் அவர் தனியான அறையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஜனவரி 20ம் திகதி சீன அரசு ‘கொரோனா’ வைரஸ் தாக்குதல் குறித்து தெரிவித்தது. அதன் பிறகு சுகாதாரத்துறை அதிகாரிகள் டாக்டர் லீ வென்லியாங்கை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment