Header Ads

விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட முடியாதுள்ளது




தேர்தல்கள் ஆணைக்குழு  அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறி செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மித்தெனிய பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நடத்தப்படும் பிரச்சார கூட்டங்களில் மற்றுமொரு கூட்டம் மித்தெனியவில் நேற்று நடைப்பெற்றது.

அங்கு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஸ, உயர் தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதாக தெரிவித்தார்.

அவர்களுக்கான பாடநெறி நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்றவகையில் அமைவதாகவும், தொழிநுட்ப கல்வியில் மிக குறுகிய காலத்தில் புத்தியஜீவிகளுக்கு பயிற்சியளித்து அவர்களுக்கு சிறந்த சம்பளம்
ஒன்றை வழங்க கூடியவகையில் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, சஜித் பிரேமதாச 54 வயதான இளைஞன்
என்றால் அருக்கும் 10 வயதுக்கு இளமையான ஒருவரையும் இளைஞன் என அர்த்தப்படுத்திக் கொள்ள
முடியும் என தெரிவித்தார்.

சஜித் பிரமேதாச பாலம் ஒன்றில் கயிற்றை பிடித்துக் கொண்டு நடப்பதை கண்டால் அவரை இளைஞன் என எவ்வாறு கூறுவது? என கேள்வி எழுப்பிய அவர், சில வீடுகளில் கடன்களை செலுத்த முடியாத பெண்கள் அவ்வாறுதான் நடந்துக்கொள்வார்கள் எனவும் கூறினார்.

இதன்போது உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஸ, தற்போது பிக்குகளுக்கு சமய போதனை ஒன்றை கூட நிம்மதியாக நடத்த முடியவில்லை என தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்களுக்கு அமைய அவ்வாறு செய்ய முடியாது எனவும், இதனால் விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் கூறினார்.

அதற்கமைய மனிதர்களின் அடிப்படை உரிமைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீறியுள்ளதாக தெரிவித்த அவர் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எவராலும் பறிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

இது போன்ற செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் இவ்வாறு செயற்படுவது நியாயமா? என அனைத்து மதத்தவர்களும் சிந்துக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிதுசிறிதாக மக்களை வேறு திசைக்கு கொண்டு செல்லும் அவர்களை ஆட்சியில் அமர்த்த முடியுமா எனவும் வினவினார்.

Powered by Blogger.