காபன் வரி நீக்கப்படும் - நாட்டின் பொருளாதாரம் குறித்த தவறான தகவல்கள்
வாகனங்களுக்காக அறவிடப்பட்டுவந்த காபன் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திய காபன் வரியை 23 ஆம் திகதியிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, இது வரை காபன் வரியை செலுத்தியவர்களுக்கு அதனைத் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது.
எனினும், எதிர்காலத்தில் இதனை ஈடு செய்வதற்கு புதிய வழியொன்று கண்டறியப்பட வேண்டியுள்ளது. எதிரணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வற் வரியை 8 சத வீதத்தால் குறைப்பதாகவும் உழைக்கும் போது செலுத்தப்படும் வரியை இரத்துச் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யும் போது இந்த வருடத்தில் மட்டும் இழக்கும் 41500 கோடி ரூபாவை எவ்வகையில் ஈடுசெய்வது என்பது குறித்து அவர் நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும்.
அரச நிதி தொடர்பாக, எந்த அறிவும் இல்லாததால் நாட்டின் பொருளாதாரம் குறித்த தவறான தகவல்களை தெரிவித்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்த ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ முற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதனையும் செய்ய கோட்டாபய துணிந்து விட்டார். நாட்டை அதலபாதாளத்துக்கு இட்டுச்செல்லவே அவர் முயற்சிக்கிறார் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment