பிரபல ஹோட்டல்களுக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் என போலி கடிதம் அனுப்பிய பொலிஸ் OIC பணிநீக்கம்
கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்து கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோட்டை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் நிர்வாக பொறுப்பதிகாரி ஆகியோரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
ஹோட்டல்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக ஹோட்டல்களுக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து கடிதமொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து, அவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படாது என பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment