ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனியான நுழைவாயில் தேவையில்லை; சவுதியில் புதிய சட்டம்
சௌதி அரேபியாவில் உள்ள உணவகங்கள் இனி ஆண்கள் - பெண்களுக்கு என்று தனித் தனி நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழை வாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது.
அதே போல உணவகங்களின் உள்ளேயும், ஆண்கள் மட்டுமே இருக்கும் பகுதியும் பெண்கள் மற்றும் குடும்பமாக வந்த வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதியும் திரைச்சீலை கொண்டு பிரிக்கப்பட்டு இருக்கும்.
எனினும், ஏற்கெனவே இந்த கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறையில் தளர்ந்து வந்தது. பல உணவகங்கள், காபிக் கடைகள், சந்திக்கும் இடங்கள் போன்றவை இத்தகைய பாலினப் பிரிவினை முறையை கைவிட்டுவந்தன.
இந்நிலையில், உணவகங்கள் பாலின அடிப்படையில் நுழைவாயில் வைத்திருப்பது கட்டாயம் அல்ல என்றும், அப்படி தனித்தனி நுழைவாயில் வேண்டுமா என்பதை அந்தந்த உணவகங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் சௌதி அரேபியாவின் நகராட்சி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது.

Post a Comment