75 மில்லியன் ரூபா மோசடி - விமலுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை முறைகேடாக சம்பாதித்தார் என குற்றம் சுமத்தி அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்துள்ள வழக்கை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திகதியை நிர்ணயித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் இன்று 12 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ட்டுள்ளது.
இந்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 7 மற்றும் 9 ம் திகதிகளில் விசாரணைக்கு எடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினங்களில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சாட்சியாளர்களுக்கு அறிவிப்பாணை அனுப்புமாறும் நீதிபதி, பதிவாளருக்க உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அமைச்சர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
தனது தரப்புவாதி அமைச்சர்களின் விசேட கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளதால், நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை விமல் வீரவங்சவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அடுத்த வழக்கு விசாரணையின் போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் எனவும் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2014 ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரையான காலத்தில் அமைச்சராக பதவி வகித்த வீரவங்ச தனது சட்ட ரீதியான வருமானத்திற்கு அதிகமாக 74 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் மற்றும் பணத்தை சம்பாதித்துள்ளதாக குற்றம் சுமத்தி, இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.

Post a Comment