குர்ஆன் மதரசாவிற்கு செல்லாத மகனுக்கு கொடூர தண்டனை - மின் அழுத்தியை சூடேற்றி உடல் முழுதும் சுட்ட தாய்
தாய் ஒருவர் தனது மகனை சூடேற்றிய மின்னழுத்தியினால் சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று காத்தான் குடியில் பதிவாகியுள்ளது.
காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர்வீதியில் வசித்து வரும் சிறுவனே இவ்வாறு தாயினால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுவன் அறநெறிக்கல்விக்காக குர்ஆன் மதரசாவிற்கு சனிக்கிழமை தோறும் செல்வது வழக்கமாகும்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சிறுவன் மதரசா அறநெறிக்கல்விக்காக செல்லாமல் நித்திரை கொண்டுள்ளார்.
தாய் தனது மகனை பல தடவைகளை நித்திரையிலிருந்து விழிக்க செய்ய முயற்சித்துள்ளார்.
எனினும் சிறுவன் நித்திரையிலிருந்து விழிக்கவில்லை.
ஆனால் தாய் விடுவதாக இல்லை பலவந்தமாக எழுப்பியுள்ளார்.
நித்திரை குழப்பியதற்காக சிறுவன் அருகிலிருந்த மின்னழுத்தியினை (உடையழுத்தி) தூக்கி எறிந்துள்ளார்.
தாய்க்கு மகன் மீது கோபம் ஏற்பட்டுள்ளது.
இரகசியமாக மின்னழுத்தியினை சூடேற்றி நித்திரையிலிருந்த மகன் உடம்பில் வைத்து தாக்கியுள்ளார்.
சிறுவன் பலமுறை கெஞ்சிப்பார்த்தும் தாய் தொடர்ச்சியாக சிறுவனை சித்திரவதை செய்துள்ளார்.
சிறுவனுக்கு உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்தால் தாம் காவல் துறையினரின் விசாரணைகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தினால் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கவும் தாய் இணங்கவில்லை.
சிறுவன் தீக்காயங்களுடன் வேதனைகளை அனுபவித்து வந்தமை அயலவர்களுக்கு தெரியவந்துள்ளது.
அயலவர்கள் சிறுவன் கல்வி கற்கும் பாடசாலைக்கு சென்று அதிபரிடம் முறையிட்டுள்ளனர்.
பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலையின் அபிவிருந்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து சிறுவனின் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
சிறுவனின் வீட்டிற்கு வருகை தந்த மேற்படி அதிபர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிறுவனை பார்வையிட வேண்டும் என தாயிடம் கோரியுள்ளனர்.
தாய் பல போலி காரணங்களை கூறி சிறுவன் வீட்டில் இல்லை என தெரிவித்து பார்வையிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
எனினும் நீண்ட உரையாடல்களின் பின்னர் சிறுவனை பார்வையிட அனுமதி கிடைத்துள்ளது.
சிறுவனை பார்வையிட்ட பாடசாலை அதிபர் மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் சிறுவன் தீக்காயங்களுக்கு உள்ளாகியிருப்பதை அறிந்துக்கொண்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதித்துள்ளனர்.
காத்தான்குடி வைத்தியசாலை நிர்வாகம் சிறுவனுக்கு சிகிச்சையளித்துள்ளதோடு காவல்துறை வாயிலாக சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

Post a Comment