Header Ads

கொரோனாவால் உயிரிழந்வர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட வேண்டும் - புதிய சுற்றுநிருபம்

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படத்தான் வேண்டும் என உத்தரவிட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசிங்க, சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

01 ஏப்ரல் 2020 எனும் திகதியிடப்பட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவின் கையெழுத்துடன், இந்த சுற்று நிருபம் வெளியாகியுள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்த நீர்கொழும்பைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்புகளும் கண்டனங்களும் அடங்குவதற்குள், மேற்படி சுற்று நிருபத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

‘கொவிட் 19 தொற்று காரணமாக இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்தல் மற்றும் அகற்றுதல்’ எனத் தலைப்பிடப்பட்டு, இந்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் 19 காரணமாக ஏற்படும் மரணங்களை இந்த சுற்று நிருபம் 04 வகைப்படுத்தியுள்ளது.

அவை;

கொரோன வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டதென உறுதிப்படுத்தப்பட்ட மரணம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டதென சந்தேகிக்கப்படும் மரணம்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான சாத்தியமுள்ள மரணம்.

கொரோனா தொற்றினால் மரணிப்பதற்கு சாத்தியம் குறைந்த, நிமோனியாவினால் ஏற்பட்ட மரணம்.

ஆகியவையே மேற்படி 04 வகைகளுமாகும்.

இந்த 04 வகை மரணங்களில் எது ஏற்பட்டாலும், அவ்வாறானவர்களின் உடல்கள் எரிக்கப்பட வேண்டுமென, அனில் ஜயசிங்க வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.