அரசாங்கம் பொதுத் தேர்தலை எப்போது நடத்தும்? ரணில் கூறினார்
தேர்தல் ஆணைக்குழுவால் திகதி குறிக்கப்பட்ட ஜூன் 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்த முடியாதெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, ஓகஸ்டில் தேர்தலை நடத்துவதற்கே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமை, கடமைகளுக்குத் திரும்புவோருக்கான போக்குவரத்து வசதிகள், சுகாதார அமைச்சின் செயற்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில், இந்தக் கலைந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பணியாளர்கள் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனினும், முறையான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று இதன்போது அவரிடம் வலியுறுத்தப்பட்ட போது, முறையான திட்டங்கள் இல்லாமல் சட்டத்தை உருவாக்க முடியாதென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜூன் 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்தும் நோக்கிலேயே நாடு வழமைக்குத் திருப்பிவிட்டதாகக் கூறி, அரசாங்கம் சில செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதென முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, நாடு தற்போதிருக்கும் நிலையில், ஜூன் மாதம் 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்துவது கடினம் என்றும் ஆகையால், ஓகஸ்ட் மாதத்திலேயே தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
எனினும், சுகாதார அமைச்சின் பரிந்துரை கிடைக்கும் வரையிலும் தேர்தல் ஆணைக்குழுவால் எவ்விதமான தீர்மானங்களையும் எட்டமுடியாது என்றும், ரணில் விக்கிரமசிங்க இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment