Header Ads

இந்த ஊரடங்குச் சட்டம் சட்ட ரீதியானதா? அஜித் ரோஹண வழங்கியுள்ள விளக்கம்

அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது சட்டரீதியற்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டை சட்டமா அதிபர் திணைக்களமும், பொலிஸ் தலைமையகமும் நிராகரித்துள்ளது. 


இதுகுறித்து இன்று சனிக்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பேசிய பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண, விளக்கம் அளித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் கைது குறித்து அவருக்காக முன்னிலையாகிய சட்டத்தரணி சுமந்திரன், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது சட்டரீதியானதாக அமுல்படுத்தப்படவில்லை என்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

அதனாலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனினும் அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, பிணை வழங்கப்பட்டது அப்படிப்பட்ட காரணத்திற்காக அல்ல.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது எந்தவிதத்திலும் சட்டத்திற்குப் புறம்பானதல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் வியாக்கியானம் கோரியிருந்தோம்.

ஜனாதிபதி சட்டத்தரணியும், சட்டமா அதிபருமான தப்புல டி லிவேரே நேற்று மாலை பதில் பொலிஸ்மா அதிபருக்கு விளக்கத்தை அனுப்பியிருந்தார்.

அதற்கமைய அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டமும், அதனை அமுல்படுத்திய வரையறைகளும் சட்டரீதியானதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த ஊரடங்குச் சட்ட விவகாரத்தை தொடர்ந்தும் அவதானிப்பதோடு சட்டத்தை மீறுகின்ற நபர்களை கைது செய்கின்ற அதேவேளையில், வாகனங்களையும் பறிமுதல் செய்வோம்’ என்றார்.

இதேவேளை ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக கடந்த சித்திரைப் புத்தாண்டு தினத்தில் கைதாகிய முன்னாள் எம்.பி ரஞ்ஜன் ராமநாயக்கவின் வழக்கு நுகேகொடை நீதிமன்றில் நடந்தது.

இதில் ஆஜராகிய முன்னாள் எம்.பி ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், தற்போது அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது சட்டரீதியாக அறிவிக்கப்படவில்லை. வர்த்தமானியும் விடுக்கப்படவில்லை.

எனினும் தனிமைப்படுத்தல் விடயத்தைக் கருத்திற்கொண்டு மக்கள் அதனை பின்பற்றியாக வேண்டும் என்று கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.