ஹிருணிக்காவுடன் மோசமான முறையில் நடந்து கொண்ட கோட்டாவின் ஆதரவாளர்கள்
தேர்தல் செயலகத்திற்கு அருகில் கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மோசமான முறையில் நடந்து தன்னை தொந்தரவு செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிலும் பதில் பொலிஸ் மா அதிபரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு வோக்ஸ்வோல் வீதியில் உள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரதான தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹிருணிக்கா இதனை குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுவை தாக்கல் செய்த சஜித் பிரேமதாசவை வாழ்த்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றதாகவும் தனது வாகனம் தவறுதலாக கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் இருந்த இடத்திற்கு சென்ற போதே தான் இந்த சம்பவத்தை எதிர்நோக்கியதாகவும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.
பெண் மற்றும் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தன்னுடன் நடந்துக்கொண்ட விதம் குறித்து கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளதாகவும் ஹிருணிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment