Header Ads

பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போதே நாட்டு மக்கள் மகிழ்சியடைந்தனர்





சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால், மீண்டும் இளைஞர்கள் யுவதிகள் ரயர்களில் இடப்பட்டு எரிக்கப்பட்டு கொல்லப்படுகின்ற பிரேமதாசவின் யுகமே மலரும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.


எனவே, மீண்டும் நாட்டில் பிரேமதாசவின் யுகம் வராதபடிக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குருநாகல் - கல்கமுவ பகுதியிவ் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்ற ஒன்று இல்லை. வேலை செய்பவர் எவரும் இல்லை. பேச்சு மட்டுமே எஞ்சியுள்ளது. பிரேமதாசவின் யுகத்தை நாங்கள் மறக்கவில்லை.


தாம் ஆட்சிக்கு வந்தால் தனது தந்தையின் யுகத்தைக் கொண்டு வருவதாக சஜித் பிரேமதாச கூறுகின்றார். பிரேமதாசவின் யுகம் நினைவிருக்கிறதா? அந்த சந்திகளில் இளைஞர்கள் ரயர்களை இட்டு எரித்துக் கொன்றமை ஞாபகம் இருக்கிறதா? இது கொடூர காட்சியாகும்.

வீதிகளில் தொங்கவிடப்பட்டு ரயர்களை இட்டு எரித்துக்கொன்ற இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை எமக்கு நினைவிருக்கும் என்றால் பிரேமதாசவின் யுகத்திற்கு மீண்டும் செல்லமாட்டோம். எனது பகுதியில் வசந்த என்பவரை கூட்டிச்சென்று கொலை செய்த விதம்.

நான் அடிக்கடி கூறுவதுதான், எனது வீட்டிலிருந்து மாத்தறை நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் சீனிமோதர என்கிற பாலத்திற்கு அருகில் முத்துமால என்ற இளைஞனை கொலை செய்திருந்தனர்.

அங்கிருந்து மாத்தறைக்கு 28 கிலோ மிற்றர் தூரம்தான். அதற்கிடையில் 28 சடலங்ளைக் கண்டேன். இந்த பகுதிகளிலும் அப்படித்தான் இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இன்று அந்த வரலாறு மறக்கப்பட்டுவிட்டது.

பிரேமதாசவின் யுகத்தைப் பற்றி பேசும்போது ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது. பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட தினம்தான் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக பாற்சோறு உண்டும் பகிர்ந்தும் கொண்டாடினார்கள்.
இப்படிப்பட்ட யுகம் எமக்கு அவசியமில்லை, நாங்கள் கொண்டுவரவும் தேவையில்லை.

ஆகவே வேலை செய்யக்கூடிய ஒரு நபரையே இப்போது நாங்கள் களமிறக்கியிருக்கின்றோம். அவர்தான் கோத்தபாய ராஜபக்ச” என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.