ஒருவரையாவது தூக்கில் போடுவேன்; ஓய்வு பெறும் போதும் அடங்காத கொலை வெறியில் மைத்திரி
தனது பதவிக் காலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் தாம் ஒருவருக்காவது மரண தண்டனையை நிறைவேற்ற ஆசைப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்பொழுது போதை பொருள் பாவனை நாட்டில் அதிகரித்துள்ளது. எனவே நாட்டின் இளம் சமுதாயத்தை பாதுகாக்க இதுவே சிறந்த தீர்மானம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இளம் சமுதாயத்தை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்பதற்கு தாம் மிகவும் கடினமான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக தாம் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்திருந்தாலும் அதற்கு உச்ச நீதிமன்றம் இடமளிக்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.அந்த தீர்ப்பிற்கு தாம் தலைவணங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு தெரிவித்தார்.
சில வேளை மரணதண்டனையை அமுல்படுத்த எதிர்காலத்தில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டால் தமது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக நாட்டின் இளைஞர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒருபோதை பொருள் வர்த்தகரிற்காவது தாம் மரணதண்டனையை வழங்குவதற்கு ஆசைப்படுவதாக குறிப்பிட்டார்.
நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற இளைஞர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் 3 ஆவது சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த கருத்தை தெரிவித்தார்.

Post a Comment