நாங்கள் இரட்டை சகோதரர்களை போன்றவர்கள்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்ததன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் அதிவிசேட வெற்றியை பெறுவார் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோகாலை தொகுதி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
இந்த கூட்டம் கேகாலையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இல்லத்தில் நேற்று (07) இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய ரஞ்சித் சியம்பலபிட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது மனமகிழ்வோடு காணப்படுவதாக கூறினார்.
சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ஏற்படுத்திய இந்த இணைவுக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும், கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெற செய்வதற்கு தன்னாலான அனைத்தையும் செய்வதாகவும் தெரிவித்தார்.
அதற்கமைய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கோகாலையில் அதிகூடிய 150,000 வாக்குகளை பெற்றுக்கொடுத்து வெற்றியை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது கட்சியுடன் இணைந்ததன் ஊடாக ஒரு விசேட முன்னணியுடன் பயணிக்க முடிந்துள்ளதாக கூறினார்.
´நாங்கள் இரட்டை சகோதரர்களை போன்றவர்கள்´ என தெரிவித்த அவர் கடந்த தேர்தலில் ஆட்சி அமைத்து எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஜனாதிபதி தனக்கு வழங்கியதாகவும் கூறினார்.
´எதிர்க் கட்சியில் இருந்துக்கொண்டு நாம் கட்சி ஒன்றை உருவாக்கினோம்´ என தெரிவித்த அவர் பிரதேச சபை தேர்தல்களில் 71 சதவீத வெற்றியை பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் வெவ்வேறாக எல்பிட்டிய தேர்தலை சந்தித்தாகவும் அதில் கிடைத்த வாக்குகளை ஒன்றிணைத்து பார்த்தால் அது 70 சதவீதமான வாக்குகளாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படியானால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் இணைந்துள்ளதன் மூலம் அதிவிசேட வெற்றியை ஈட்டிக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment