மைத்திரி காலத்தில் கோடிக்கணக்கு பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்ட மற்றொரு சம்பவம்
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட தேசிய பொருளாதார சபை கோடி கணக்கில் மக்கள் பணத்தை வீணடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது என்று அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேசிய பொருளாதார சபையை மைத்ரிபால சிறிசேன 2017ம் ஆண்டு உருவாக்கினார். அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உருவாக்கப்பட்டிருந்த பொருளாதார முகாமைத்துவக் குழுவின் நடவடிக்கைகள் திருப்தியடையவில்லை என்று கூறி அது கலைக்கப்பட்டது.
இது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேராசிரியர் லலித் சமரகோன் தலைமையில் நிறுவப்பட்டதுடன், மைத்ரிபால சிறிசேனவின் ஜனாதிபதி பதவி காலம் நிறைவடைவதுடனே லலித் சமரகோன் மீண்டும் அமெரிக்காவிற்கு தப்பியோடியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த தேசிய பொருளாதார சபையின் பிரதான அலுவலகமாக உலக வர்த்தக மையத்தின் இரண்டு தளங்கள் ஒதுக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக வாடகை வழங்கப்பட்டாலும் அலுவலக வளாகம், இந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட அனைத்து உபகரணங்களும் மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதேவேளை இந்த நிறுவனத்திற்காக அரசின் உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளதுடன் இவ்வாறு கோடிக்கணக்கான மக்கள் பணத்தை செலவிடப்பட்டிருந்தாலும், இந்த மூன்று ஆண்டுகளில் தேசிய பொருளாதார சபை எந்தவொரு பயனுள்ள நோக்கத்திற்கும் சேவை செய்யவில்லை என்று தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Post a Comment