UNP ஆட்சியாக இருந்திருந்தால் கொரோனா வைரஸால் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தற்போதும் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியாது. மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலைமையே காணப்பட்டிருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சுதந்திர கட்சி தலைமயகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கிறது.
எனவே மக்கள் இது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனினும் அவதானமாக இருக்க வேண்டும்.
இந்த வைரஸ் பிரச்சினை வெறுமனே பணத்தின் மூலம் சரி செய்யக் கூடியதல்ல. அனைவரும் ஒன்றிணைந்து அறிவு பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் சரி செய்யக் கூடியதாகும்.
கடந்த அரசாங்கமே தற்போதும் ஆட்சியில் இருந்திருந்தால் இவ்வாறு துரிதமாகச் செயற்பட்டிருக்காது. எந்த பிரச்சினையானாலும் எமக்கு முகங்கொடுக்க முடியும் என்று கூறிவிட்டு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமலேயே இருந்திருப்பர். இதனால் மக்களும் அச்சத்துடனேயே இருந்திருப்பார்கள். ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்த்திருக்கிறது.
இந்த வைரஸ் தொற்றானது சுகாதார பிரச்சினை மாத்திரமல்ல. குடிவரவு - குடியகழ்வு என பல்வேறு துறைகளிலும் தாக்கம் செலுத்தியிருக்கிறது.
எனவே தற்போது எத்தனை வைத்தியர் , தாதியர் இருக்கின்றனர் என்று தேடிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம் இதுவல்ல. எந்தளவுக்கு இந்த பிரச்சனைக்கு முகங்கொடுக்க முடியும் என்பது தொடர்பில் ஆராய்வதே அத்தியாவசியமானதாகும் என்றார்.

Post a Comment