சஜித்திடம் வழங்கிவிட்டு ரணில் நழுவுவதற்கான காரணம்
தோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை சஜித் பிரேமதாசவிடம் ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.
லிந்துலை மட்டுக்கலை பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே அரசாங்கத்தின் நிதி அறிக்கையை தோற்கடித்து, அதன்மூலம் பிரசாரத்தை பெற்றுக்கொள்வதற்கு எதிர்கட்சி முற்பட்டது. எனினும், அதற்கான வாய்ப்பையும் நாம் இல்லாது செய்தோம்.
ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. அதனை செலுத்துவதற்காகவே நிதி அறிக்கை முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நிதி அதிகாரம் ஜனாதிபதியின்கீழ் வந்துவிடும். அதன்பின்னர் நிதி முகாமைத்துவம் உரிய வகையில் இடம்பெறும்.
அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எமக்குமிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டதாலேயே நாம் புதிய கட்சியை ஆரம்பித்தோம். அதன்பின்னர் அவர்களில் சிலர் எங்களுடன் இணைந்தனர். தற்போது கூட்டணியாக பயணிப்பதற்கு இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, முரண்பட வேண்டிய அவசியமில்லை.
தொகுதி பங்கீடு பற்றியும் பிரச்சினை இல்லை. அது தொடர்பில் அரசியல் சபையே முடிவெடுக்கும்.
ஜனாதிபதி தேர்தலின் போது பொறுப்பை சஜித்திடம் ரணில் வழங்கினார் அதன்போது தோல்வி ஏற்பட்டது. இம்முறையும் தோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பும் அவரிடம் ரணிலால் கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment