சுகாதாரம் பற்றி இராணுவத்திடமும், அரசியலமைப்பு பற்றி தேரர்களிடமும் ஆலோசனை கேட்கும் ஜனாதிபதி இது
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறத்து ஆராய்வதற்காக கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 07 எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
சஜித் பிரமேதாச (ஐமச), ரணில் விக்கிரமசிங்க (ஐதேக), ஆர். சம்பந்தன் (ததேகூ), சம்பிக்க ரணவக்க (ஜாஹெஉ), மனோ கணேசன் (தமுகூ), ரிசாத் பதூதீன் (அஇமகா), ரவுப் ஹக்கீம் (ஸ்ரீமுகா) ஆகியோர் இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
கொரொனா துயர் துடைக்க, அமெரிக்க, ஐநா, சீன, இந்திய, ஐரோப்பிய நன்கொடைகள், பலகோடி டொலர் கணக்கில் வருகின்றன. இவற்றை கொண்டு அரசாங்கம், நோய் தொற்றிய நோயாளிகளுக்கு சுகாதார நிவாரணம், வருமானம் இழந்த பொது மக்களுக்கு வாழ்வாதார நிவாரணம் வழங்க வேண்டும்.
இவை இன்று முறையாக நடக்கவில்லை. ஆகவே இவை பற்றி கேள்வி எழுப்பி, விவாதம் செய்து, வெளிப்படையாக பேச பாராளுமன்றம் கூட வேண்டும். ஏன் அரசு தயங்குகிறது?
கொரொனாவை, ஜனாதிபதி மிக சிறப்பாக கையாளுகிறார் என்ற ஆரம்பகால அபிப்பிராயம், இப்போது பலவீனமடைந்து விட்டது.
சுகாதாரம் பற்றி இராணுவத்திடமும், அரசியலமைப்பு பற்றி தேரர்களிடமும் ஆலோசனை கேட்கும் நிலையில் இன்று ஜனாதிபதி கோட்டா இருக்கின்றார் என்று மனோ கணேசன் கூறியுள்ளார்.

Post a Comment