Header Ads

ஊரடங்கு சட்டம் மீண்டும் நீடிக்கப்பட்டது - சற்றுமுன்னர் வௌியாகிய அறிவிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் படுவதாக கூறப்பட்டு இருந்தபோதிலும் அதில் தற்போது மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் குறித்த மாவட்டங்களுக்குள் எவருக்கும் உள்நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மீண்டும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட உள்ளது.

குறித்த மாவட்டங்களில் ஏப்ரல் 24 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 ஆம் திகதி காலை 5 மணி வரையில் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் திகதிகளான வார இறுதிநாட்களில் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வேலையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் முன்னர் குறிப்பிட்ட நிபந்தனைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.