இலங்கை முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்ட பேஸ்புக் நிறுவனம்
உலகின் பிரபல சமூக வலைத்தலமான பேஸ்புக் நிறுவனம் இலங்கை முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதாக அறிவித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு இலங்கையின், திகன பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவம் தொடர்பிலே பேஸ்புக் மன்னிப்பு கேட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு, இலங்கையில் முஸ்லிம் உணவகத்தின் உணவுப் பொருட்களில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாக பொய்யாக குறிப்பிட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேஸ்புக் பக்கங்கள் ஊடாக இனவாத கருத்துக்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் பரப்பட்டதை தடுக்க முடியாமல் போனதாக பேஸ்புக் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த வன்முறையின் போது பேஸ்புக் பக்கங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதற்காக அந்நிறுவனம் இலங்கை முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் நடத்திய உள்ளக விசாரணை அறிக்கையில் “சில நாடுகளில் இடம்பெற்ற வன்முறை, மனித உரிமை மீறல்களில் பேஸ்புக் நிறுவனத்தின் குறைபாடுகளும் பங்களிப்பு செய்தது” என்று குறிப்பிட்டதை அடுத்து, நேற்று பேஸ்புக் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.
இதற்கு முன்னர் மியன்மாரில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவம் தொடர்பிலும் பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே மன்னிப்பு கேட்டிருந்தது.

Post a Comment