பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பொதுஜன பெரமுன உறுப்பினர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்கியத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹிங்குரக்கொடை பிரதேச சபையின் உறுப்பினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி பொலன்நறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட மூன்று பொலிஸார் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது, இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
கசிப்பு விற்பனை சம்பந்தமான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்ற காரணத்தினால் சந்தேக நபரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. சந்தேக நபர் குறித்த பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் இருந்த போது பொலிஸார் அவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர். அதற்கு தடையேற்படுத்திய பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாரை தாக்கியுள்ளார்.
தாக்குதலை நடத்தி விட்டு தலைமறைவான பிரதேச சபை உறுப்பினர் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment