நான்கரை வருட அரசாங்கத்தில் பாட்டலி சம்பிக ரணவக செய்தது என்ன?
கடந்த அரசாங்கம் தோல்வியுற்ற அரசாங்கமாக இருந்ததாக அந்த அரசாங்கத்தில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றோர் தற்போது தெரிவித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கொழும்பு மாநகர சபை என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருவது ஐக்கிய தேசிய கட்சி. எனினும் கடந்த நான்கரை வருட காலமாக ஐக்கிய தேசிய கட்சி இந்த கொழும்பு மாநகருக்கு என்ன செய்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்களையும் இடைநிறுத்தினர்.
ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலும் அதே நிலைமையே காணப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது 4500 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார். எனினும் கடந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தால் 40 வேலை வாய்ப்புக்களையும் கூட பெற்றுக் கொடுக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் கடந்த அரசாங்கத்தால் உரிய முறையில் செயற்படுத்த முடியவில்லை என பாட்டலி தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் அறிந்து கொண்டு 4 வருட காலமாக அந்த அரசாங்கத்தில் என்ன செய்தீர்கள் என நாமல் ராஜபக்ஷ இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

Post a Comment