Header Ads

திடீரென நடு வீதியில் நின்ற மனோ கணேசனின் வாகனம்

அமைச்சர்கள் வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனங்கள் பற்றி பெரிய எடுப்பில் பேசப்படுகிறது. எனது அமைச்சு பற்றியும் பேசப்பட்டது. நான் அமைச்சராகியது, 2015ம் ஆண்டு. அப்போது அங்கு இருந்த பழைய வாகனம், அன்றைய முன்னாள் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, ஜோசப் மைக்கல் ஆகியோர் பயன்படுத்திய வாகனம் ஆகும். உடனடியாக வாகனம் வாங்க நிதி ஒதுக்கீடு இருந்தாலும், நான் வாகனம் வாங்கவில்லை.


இரண்டு வருடம் முடிய, 2017ல் ஒருமுறை பணி காரணமாக நான் யாழ்ப்பாணம் சென்றபோது, எனது வாகனம் நடு வீதியில் நின்று விட்டது. அதன்பிறகே வாகனம் வாங்கும்படி அமைச்சு செயலாளர் என்னிடம் கேட்டுக்கொண்டார். பிறகே வாகனம் வாங்கும்படி நான் சொன்னேன். அதாவது நிதி ஒதுக்கீடு இருந்தும் இரண்டு வருடம் கழித்து அமைச்சருக்கு கடைசியாக வாகனம் வாங்கிய அமைச்சு, எனது அமைச்சே என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் எம்பி நேற்று பாராளுமன்றத்தில் உரையாடும் போது கூறினார்.

மனோ எம்பி மேலும் கூறியதாவது,

அமைச்சர்களுக்கு, அவ்வந்த அமைச்சுகள் வாகனம் வாங்குவது என்பது எப்போதும் எல்லா அரசாங்கங்களிலும் நடைபெறும் ஒரு விடயம். இதை வேண்டுமென்றே நீங்கள் பெரிது படுத்துகிறீர்கள். இவ்வாகனங்களை எவரும் வீட்டுக்கு கொண்டு போவதில்லை. அவை அந்த அமைச்சின் வாகனங்கள். எம் சொந்த வாகனங்கள் அல்ல.

அமைச்சரவை ராஜினாமா செய்த அடுத்த நாளே, நான் என் வாகனங்களை எல்லாம் மீள எனது அமைச்சு செயலாளரிடம் ஒப்படைத்து விட்டேன். இன்று யாராவது ஒரு முன்னாள் அமைச்சரின் வாகனங்கள் அந்த அமைச்சுகளுக்கு மீள ஒப்படைக்கப்பட்டிருக்காவிட்டால் அல்லது வாகனங்கள் காணாமல் போய் இருந்தால், அவற்றை தேடுங்கள். நடவடிக்கை எடுங்கள்.

ஆகவே இந்த வாகனங்களை பற்றி பேசும்போது அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பொறுப்புடன் பேச வேண்டும். பொதுவாக பேசாமல், யார் இன்னமும் வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை, யார் என்ன வாகனம் பாவித்தார்கள், என்று பெயர் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

இன்னொரு விடயம் இங்கே பேசப்படுவதில் ஒரு அடிப்படை மயக்கம் உள்ளது. அதாவது, இந்த வாகனங்கள் வாங்கும் நிதி தொகையில் 60 விகிதம் மீண்டும் வரி காரணமாக அரசாங்க திறைசேரிக்கு போகிறது. ஒரு வாகனம் 40 மில்லியன் என்றால் சுமார் 30 மில்லியன் மீண்டும் அரசாங்க திறைசேரிக்கு போகிறது.

எனது அமைச்சில் மூன்று சொகுசு வாகனங்கள் இருந்ததாக கூறுகிறார்கள். ஒன்று அமைச்சரான எனது வாகனம். அடுத்த இரண்டு வாகனங்கள் எவை? இன்று இந்த ஆளும் கூட்டணியின் தவிசாளர் யார்? முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. மைத்திரிபாலவுக்கு கீழ் இருந்த அமைச்சின் ராஜாங்க அமைச்சரே திரு. பெளசி. அதேபோல் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா. இவர்கள் இருவரும் கடைசி வருடத்திலேயே என் அமைச்சுடன் இணைக்கப்பட்டார்கள். இவர்கள் வாங்கி பயன்படுத்திய வாகனங்களும் இப்போது எனது கணக்கில் சொல்லப்படுகிறது.

ஒரு அமைச்சரவை அமைச்சர் என்ற முறையில் எனக்கு அதிகாரபூர்வ இல்லம் ஒன்றை பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. ஆனால், அதைக்கூட நான் பெறவில்லை. அமைச்சராக இருந்தபோதும் சரி, இப்போது சரி, எனது சொந்த வீட்டில்தான் நான் வாழ்கிறேன். நான் ஒருபோதும் இந்த அமைச்சர்களுக்கான அதிகாரபூர்வ இல்லம் ஒன்றை கேட்டு பெறவே இல்லை. பத்தரமுல்லை மாதிவலயில் அமைந்துள்ள எம்பீக்களின் விடுதி வீட்டை கூட நான் ஒருபோதும் பெற வில்லை.

நான் இப்படிதான் எனது அரசியல் பொதுபணிகளை செய்கிறேன். சொகுசு வாகனங்களை அரசியல் பதவி பெற்ற பிறகுதான் கண்டவனும், நானல்ல. அதேவேளை அரசியல் பதவிகளை பயன்படுத்தி சுகம் அனுபவித்தவனும், நானல்ல.
Powered by Blogger.