சுதந்திர கட்சியின் வாக்குகள் இன்றி கோட்டாபய வெற்றி பெற முடியாது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முழுமையான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் இன்றி பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,
கடந்த காலங்களில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுனவுடன் எமக்கு பிரச்சினைகள் இருந்தன. பொதுஜன பெரமுன தனியான பயணத்தை மேற்கொண்டது.
நாங்கள் தனியான கொள்கையை கொண்டிருந்தோம். இரண்டு கட்சிகளும் தனித்தனியாக செயற்பட்டன. ஒரே நபர்கள், இரண்டு கட்சிகள். இரண்டு கட்சிகளாக பிரிந்தே நாம் செயற்படுகிறோம்.
சகல விரோதங்களையும் கோபங்களை ஒதுக்கி வைத்து விட்டு, நவம்பர் 16ஆம் திகதி கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய நாங்கள் ஆதரவு வழங்குவோம் என வாக்குறுதியளித்தோம்.
எப்படி தனித்து செயற்பட்டாலும் இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளினாலேயே வெற்றி பெறுவீர்கள் என நான் கோத்தபாய ராஜபக்சவிடமும் தெரிவித்துள்ளேன் என துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment