ரிஷாத் உயர் பதவிக்கு இணைத்துக் கொண்ட 38 பேர் திருட்டுப் பட்டதாரிகள்
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட விசாரணை அதிகாரிகள் 213 பேரில் 38 பேரின் பல்கலைக்கழக சான்றிதழ்கள் அந்த பட்டங்களை வழங்கிய பல்கலைக்கழகங்களால் உறுதிப்படுத்தப்பட்டதல்ல என்று தேசிய கணக்காய்வு அலுலகம் கூறியுள்ளது.
நியமனம் வழங்கப்பட்டு ஒரு வருட காலத்தின் பின்னர் நடத்தப்பட்ட கணக்காய்வு விசாரணை சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஜனவரி 15ம் திகதி இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களால் பட்டப் படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்பட்ட 1386 பட்டதாரிகள் விசாரணை அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்து இருந்துள்ளனர்.
பொதுவாக பொருளியல் விஞ்ஞானம், வணிகத்துறை, முகாமைத்துவம், விநியோகம் சம்பந்தமான பட்டப்படிப்புகளை பெற்றவர்களுக்கு மாத்திரமே விசாரணை அதிகாரிகளுக்கான நியமனம் இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் ரிஷாத் பதியுதீன் அமைச்சராக இருந்தபோது அந்தப் பதவிக்கு இணைத்துக்கொள்வதற்கான கல்வித் தகைமையை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 1386 விண்ணப்பதாரிகள் 750 சிங்கள விண்ணப்பதாரர்கள், 198 முஸ்லீம் விண்ணப்பதாரர்கள், 45 தமிழ் விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிஉள்ளனர்.
நேர்முகப் பரீட்சையின் பின் 103 சிங்கள விண்ணப்பதாரிகள். 103 முஸ்லிம் விண்ணப்பதாரிகள் 10 தமிழ் விண்ணப்பதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களில் 193 பேர் பணியை பொறுப்பேற்றுள்ளனர்.
அவர்களில் வௌிநாட்டுப் பல்கலைக்கழக பட்டதாரிகள் இருந்துள்ளதுடன், சிலர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சையில் கூட சித்தி பெறாதவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம், வவுனியா, கொழும்பு, கம்பஹா மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகமானவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குறைந்த மக்கள் தொகை கொண்ட அம்பாறை, புத்தளம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவானவர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டதாக அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment